×

91வது பிறந்தநாளை கொண்டாடும் குமரி அனந்தன் நூற்றாண்டு கடந்து வாழ வேண்டும்: வைகோ வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், பெருந்தலைவர் காமராசரை தலைவராக ஏற்று அவருடன் இணைந்து பணியாற்றியவர், தமிழ் இலக்கியங்களில் ஆழமான புலமைமிக்க தமிழ் உணர்வாளர் என்ற பல்வேறு சிறப்புகள் கொண்டவர் குமரிஅனந்தன். அவர், நாளை 91ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் என்ற செய்தி தெவிட்டாத தேனாய் இனிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர், 5 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழ்நாடு பனைமர வாரியத்தின் தலைவர் என பல்துறைகளில் தனித்தன்மையோடு தொண்டாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

தமிழ் - தமிழர் நலன் காக்க, 10 முறை, தமிழ்நாட்டின் வீதிகளில் நடைபயணம் மேற்கொண்டவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் வினா எழுப்பும் உரிமையை பெற்று தந்தவர், பணவிடைதாளிலும், காசோலையிலும் தமிழ் மொழியை பயன்படுத்த உரிமைக்குரல் எழுப்பியவர். எளிமையை அணிகலனாக கொண்டு பழகுவதில் பண்பாட்டு பெருமகனாக - சான்றாண்மை நிரம்பிய தலைவராக, நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டும் குமரி அனந்தன் நூற்றாண்டு கடந்து தமிழ் போல் வாழ்க என நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்.


Tags : Kumari Ananthan ,Vaiko , May Kumari Ananthan celebrate her 91st birthday and live past the century: Vaiko wishes
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...