தஞ்சாவூர்: சிறுமியை ஆபாச படம் எடுத்து சர்வதேச கும்பலுக்கு விற்ற தஞ்சாவூர் பிஎச்டி மாணவரை சிபிஐ கைது செய்தது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூண்டிதோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம் பட்டதாரி. தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வரும் இவரிடம், பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அவதூறாக தகவல் அனுப்பியது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லியில் இருந்து சிபிஐ டிஎஸ்பி சஞ்சய்கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த 15ம் தேதி காலை 6 மணியளவில் பூண்டி தோப்பு கிராமத்துக்கு வந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினர். ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு, அவரை சிபிஐ அதிகாரிகள் காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தஞ்சாவூரில் உள்ள, ஒன்றிய அரசின் கல்வி நிறுவன விருந்தினர் மாளிகையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தவர் என்பதும், இவர் சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான விக்டர் ஜேம்ஸ் ராஜாவை, நேற்று மதியம் தஞ்சாவூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2நாட்கள் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கவும், வரும் 20ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை சிறையில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது சர்வதேச போலீசார் ஒன்றிய அரசிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி ஒன்றிய அரசு, இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. இந்தியாவில் 21 மாநிலங்களில் விக்டர் ஜேம்ஸ் ராஜா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றனர்.