வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 2.72 கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடியில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்று இரவு காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வழக்கம் போல் அங்கு வரக்கூடிய பயணிகள் ரயில்களில் சோதனை நடத்தியுள்ளனர். அதன்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் ஆய்வு செய்துள்ளனர். அச்சமயம் கோவையை சேர்ந்த ஆனந்த் நாராயணன் என்பவர் 2.72 கிலோ தங்கம், 35 லட்சம் பணத்தை கட்டுக்கட்டாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது தங்கம், பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றது தெரியவந்தது. வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது காவல்துறையினர் ஆய்வில் தங்கம், பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.