சேலம்: சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 15வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் தன்னுடன் தொடர்பில் இருந்தார் என்று அச்சிறுமி தெரிவித்தார். பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அச்சிறுவன் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் இருவருக்கும் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.