காஞ்சிபுரம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் 3 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறுவு மையக் கூட்டரங்கில், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில், 310 மனுக்கள் பெறப்பட்டது. இதுவரை 1,334 மனுக்கள் பெறப்பட்டு, 1,230 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 159 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 104 மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடு காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள், குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாயகள் தூர்வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும், மின்கம்பங்கள் மாற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. மக்களின் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.25,50,972 மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களும், ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு 7 பணிகளுக்கான ஆணைகளும், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு 7 பணிகளுக்கான ஆணைகளும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 7 பணிகளுக்கான ஆணைகளும், பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 6 பணிகளுக்கான ஆணைகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 5 பணிகளுக்கான ஆணைகள் என சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
இதில் கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணைமேயர் குமரகுருநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.