திருவள்ளூர்: வெங்கத்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்க ஊராட்சி மன்ற தலைவர் பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிமேடு பகுதி, அன்பழகன் தெரு வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சாலைகள் கடந்த மழையின் போது பெயர்ந்து போய் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றுவர மிகவும் சிரமப்பட்டனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் சாலையை அமைத்து தருமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜல்லிமேடு, அன்பழகன் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், துணைத் தலைவர் ஆர்.மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையில் கே.இ.என்.சி. அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் வ.பாலயோகி கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.