வளசரவாக்கம்: மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (25). பிரபல கஞ்சா வியாபாரியான இவர், கடந்த 11ம் தேதி ஆந்திராவில் இருந்து 13 கிலோ கஞ்சாவை கடத்திக்கொண்டு கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்தார். அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார், அவரை மடக்கிபிடித்து கைது செய்தனர். பின்னர், இதுதொடர்பாக, வழக்குபதிந்து அவரிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, புழல் சிறையில் அவரை அடைத்தனர்.
இவர்மீது ஏற்கனவே அரும்பாக்கம், புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் கல்யாணசுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அண்ணாநகர் துணை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, அண்ணாநகர் துணைஆணையர் ரோகித்நாதன் உத்தரவின்படி, கல்யாணசுந்தரத்தை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
