சென்னை சிந்தாதிரிப்பேட்டை, சூளை பகுதியில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் ரகசியமாக அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் சுற்றித் திரிந்த நபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், கொலை, 11 கொலை முயற்சி உள்ளிட்ட 23 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மோகன் (எ) தர்கா மோகன் (59) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், சூளை ரவுண்டனா பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி தெருவை சேர்ந்த துரைராஜ் (24) என்பவரை திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.