திருப்போரூர்: திருப்போரூர் ரவுண்டானா அருகே சாலையோர கால்வாய் மூடியில்லாம் திறந்தே கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ரவுண்டானா அருகே செங்கல்பட்டு சாலையில் சாலையோர மழைநீர் வடிகால்வாய் உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறையினரால் இந்த கால்வாய் அமைக்கப்பட்டு அதையொட்டி சிறுபாலமும் உள்ளது. பெரு மழைக்காலங்களின்போது, இந்த கால்வாயில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கால்வாய் மீது திருப்போரூர் பேரூராட்சி சார்பில் மூடி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கால்வாய் மூடி அகற்றப்பட்டு அடைப்புகள் வெளியேற்றப்பட்டன. ஆனால், கால்வாய் இன்னும் மூடப்படவில்லை. திறந்தே கிடப்பதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன்செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த கால்வாயை ஒட்டி மதுபானக்கடை உள்ளதால், அக்கடைக்கு வரும் வாகனங்கள் கால்வாயைத் தாண்டி சாலையில் நிறுத்தப்படுகின்றன.
மேலும், மதுப்பிரியர்கள் பலரும் இந்த திறந்து கிடக்கும் கால்வாயில் விழுந்து ஆபத்தை சந்திக்கின்றனர். ஆகவே, செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் ரவுண்டானா அருகே உள்ள சிறுபாலத்தை அகற்றி அதிகளவில் நீர் செல்லும் வகையில் அகலமான பாலம் அமைக்க வேண்டும் என்றும் திறந்து கிடக்கும் கால்வாயை மூட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.