×

சிங்கப்பூர், மலேசிய விமானங்களில் ரூ.3.68 கோடி தங்கம் கடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாள் இரவில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த மூன்று விமானங்களில் ரூ.3.68 கோடி மதிப்புடைய 7.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மலேசிய பெண் பயணி உள்பட 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்க கட்டிகளை கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறையின் தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானமும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் அடுத்தடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தன. சுங்கத்துறையின் தனிப்படையினர் அந்த 2 விமானங்களில் வந்த பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். ஆனால், அந்த 2 பயணிகளும் சுங்க அதிகாரியின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், சம்பந்தம் இல்லாமல் பேசினர். அவர்கள் கைப்பைகளில், தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஒவ்வொருவருடைய கைப்பையிலும் 34 தங்கக் கட்டிகள் வீதம், மொத்தம் இரண்டு பேருடைய கைப்பைகளிலும் 68 தங்கக்கட்டிகள் இருந்தன.

அதன் மொத்த எடை 6.8 கிலோ. சர்வதேச மதிப்பு ரூ.3.32 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகள் 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு  மலேசியாவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் பயணி, ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.36.20 லட்சம் மதிப்புடைய 740 கிராம் தங்க நகைகளை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஒரே நாள் இரவில் ரூ.3.68 கோடி மதிப்புடைய 7.54 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு சர்வதேச கடத்தல் ஆசாமிகளும், மலேசிய பெண் பயணி ஒருவரும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Singapore ,Malaysia , 3 people, including a woman, caught smuggling gold worth Rs 3.68 crore in Singapore and Malaysia flights
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...