சென்னை: தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டு வந்தது. அந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை சம்பந்தப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த போது, அது போலியான வீடியோக்கள் என தெரியவந்தது. அதை இந்நிலையில், வடமாநிலத்தவர்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு வதந்திகள் பரப்பப்படுவதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல் தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தனித்தனியாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாஜ ஆதரவு இணையதளமான ‘opindia.com’ மூலம் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருநின்றவூர் பகுதியை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் படி திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியும், வெளிமாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கருத்து வேறுபாட்டை பாஜ ஆதரவு இணையதளமான ‘opindia.com’ ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து திருநின்றவூர் போலீசார் ‘opindia,com’ இணையதள சிஈஓ ராகுல் ரூசன், எடிட்டர் நுபுர் சர்மா மற்றும் இதோடு தொடர்புடைய நபர்கள் மீது ஐபிசி 153(ஏ), 505(1),(பி),505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.