×

தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் தெலுங்கானாவில் கைது..!!

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்து, வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. நேற்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை குறித்து கேட்டறிந்தானர்.  இதன்பின் பேசிய சிராக் பஸ்வான் எம்.பி., பீகார் – தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவர் பீகாரில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என பீகார் காவல்துறை விளக்கமளித்தது. பொய்ச் செய்தியை பகிர்ந்தவர்கள் மற்றும் பரப்பிய விஷமிகள் அனைவரும் கைது செய்யப்படுவர் என பீகார் போலீஸ் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி வீடியோக்களை சமூகவலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் இளைஞர் ரூபேஸ்குமாரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். வேறு மாநிலங்களில் நடந்த தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடந்ததுபோல போலி வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இளைஞர் ரூபேஸ்குமார் தனது டிவிட்டர் கணக்கில் போலி வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் ரூபேஸை தொடர்புக்கொண்டு போலி வீடியோக்களை நீக்க அறிவுத்தியிருந்தனர். போலீசாரின் அறிவுறுத்தலை கண்டுகொள்ளாத ரூபேஸ்குமார் மீது போலீஸ் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் இன்று தெலுங்கானாவில் கைது செய்தனர்.


Tags : Telangana ,Tamil Nadu , In Tamil Nadu, working, diaspora, labor, rumour, one, arrested
× RELATED சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன்...