சென்னை: இசை நிகழ்ச்சியில் டிரோன் கேமரா மோதி பாடகர் பென்னி தயாளர் காயம் அடைந்தார். சென்னை இசை நிகழ்ச்சி ஒன்றில், பாடகர் பென்னி தயாள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். பென்னி தயாள், மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது தலைக்கு மேலே டிரோன் கேமராக்கள் பறந்து கொண்டிருந்தன. அதில், ஒரு டிரோன் கேமரா, சரியாக இயங்காமல் பென்னி தயாளின் தலையில் மோதியது. இதில், இருந்து தப்பிக்க அவர் தனது கைகளை காட்டியபோது, விரல்களில் டிரோன் மோதி காயம் அடைந்தார்.
உடனே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. பென்னி தயாளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பென்னி தயாள் கூறும்போது, ‘டிரோன் கேமராவை பயன்படுத்துவதாக இருந்தால், அதை பற்றி அறிந்த டிரோன் ஆபரேட்டர்களை வைத்து பாதுகாப்புடன் கையாள வேண்டும். அனுபவம் இல்லாதவர்களுடன் வந்தால் இதுதான் நடக்கும். இது ஒன்றும் முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்பு கிடையாது. அதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.