காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முதுகு தண்டுவட வலியால், அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (48). கூலி வேலை செய்து வந்தார். இவர், கடந்த 3 வருடத்திற்கு முன்பு முதுகு தண்டில் அதிக வலி இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் வலி குறையாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதுகு தண்டுவட வலி அதிகமானதால், தாக்குப் பிடிக்க முடியாமல், அரளி விதையை அரைத்து மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனால், மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜானகிராமன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.