கொழும்பு: இலங்கையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற அதானி நிறுவனத்தை இந்திய அரசே அடையாளம் காட்டியதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்மையில் சந்தித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கு இந்தியா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், அதானி நிறுவன பங்குகள் சரிவு அடைந்ததால் இலங்கையில் அதானி சார்பில் நடைபெறும் பணிகளுக்கு பாதிப்பும் ஏற்படாது என கூறினார்.
இந்திய அரசு அடையாளம் காட்டியதால்தான், அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசு ஒப்பந்தம் போட்டதாகவும், இரு நாட்டு அரசுகள் சம்மந்தப்பட்ட விவகாரம் என்பதால் இலங்கை மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று அலி கூறினார். இலங்கையில் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின் உற்பத்தி திட்டங்களில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதானி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததால் இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் இலங்கையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.