புதுச்சேரி: புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து கையோடு கை சேர்க்கும் மக்களை சந்திக்கும் பிரசார நடைபயணம் லாஸ்பேட்டையில் நேற்று நடந்தது. வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நடைபயணத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்து பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் 10 சதவீதமாக இருந்தது. தற்போது 40 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
காங்., ஆட்சி காலத்தில் ரூ.65ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.100 ஆகிவிட்டது. ரூ.57 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் ரூ.90 ஆக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்தி ரூ.20 லட்சம் கோடி மக்கள் பணத்தை மோடி அரசு சூறையாடியது. புதுச்சேரியில் டுபாக்கூர் ஆட்சி நடைபெறுகிறது. என்ஆர் காங்., - பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று பல வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஒன்று கூட நடக்கவில்லை. ஆனால், கலால், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல் என எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்றார்.