புதுடெல்லி: 23 உள்நாட்டு நீர் வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியதாவது: நாட்டில் மொத்தம் 113 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ளன. இவற்றில் 23 நீர்வழித்தடங்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளன. போக்குவரத்தை பொறுத்து, இவை சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு உகந்த வகையில் மேம்படுத்தப்பட உள்ளன.
திப்ரூகரில் பல கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனை சரக்கு முனையம் அமைக்கப்பட உள்ளது. ஒன்றிய அரசின் `கங்கை பூமி’ மாதிரி அடிப்படையில் கங்கையில் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த 62 படகு குழாம்கள் அமைக்கப்பட இருக்கின்றன. உள்நாட்டு நீர்வழித்தடங்களை பயன்படுத்துவதால், சரக்கு லாரிகளில் இருந்து வெளியேறும் காற்று மாசு குறையும். அத்துடன், செலவு குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.