நொய்டா: உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்தை தயாரித்த இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவன அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் அம்ப்ரோனால், டோக்-1 மேக்ஸ் ஆகிய இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி, மரியான் படோடெக் நிறுவனத்தில் ஒன்றிய மற்றும் உத்தரபிரதேச மருத்துவ நிபுணர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி, மருந்துகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது டோக்-1 மேக்ஸ் இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஆவணங்களை நிறுவனம் சமர்ப்பிக்க தவறியதால், குறிப்பிட்ட அந்த மருந்தை உற்பத்தி செய்ய உத்தரபிரதேச அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வௌியாகியுள்ளன. அதில் மரியான் பயோடெக் நிறுவன மருந்துகளில் 22 தயாரிப்புகள் தரமானதாக இல்லை என ஒன்றிய மற்றும் உத்தரபிரதேச மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், மரியான் பயோடெக் நிறுவன 2 இயக்குநர்கள், 5 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, துஹின் பட்டாச்சார்யா, அதுல் ராவத், மூல்சிங் ஆகிய 3 அதிகாரிகளை நேற்று கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.