×

லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் மாஃபியா கும்பல் தலைவனான பிரபல தாதா ரவி கானா மற்றும் அவனது காதலி காஜல் ஜா ஆகியோர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருந்த இருவருக்கும் எதிராக லுக்அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

அவர்களை நொய்டா மற்றும் உளவுத்துறை போலீசார் பல நாடுகளில் தேடி வந்தனர். இந்நிலையில் தாய்லாந்தில் பதுங்கியிருந்த இருவரையும் சர்வதேச போலீசார் உதவியுடன் இந்திய போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர். இதுகுறித்து ெநாய்டா போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பிரபல மாஃபியா கும்பல் தலைவன் ரவி கானா மீது கடந்த ஜனவரி 1ம் தேதி பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதில், ரவி கானா உள்ளிட்ட 5 பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

சில குற்றவாளிகளை கைது செய்த நிலையில் ரவி கானா மட்டும் தலைமறைவாக இருந்தான். ஏற்கனவே 10 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவனை பலாத்கார வழக்கின் அடிப்படையில் தேடி வந்தோம். முதற்கட்ட விசாரணையில் அவன் தனது காதலி காஜல் ஜாவுடன் வௌிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்தன.

அதனால் இருவருக்கும் எதிராக லுக்அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. நொய்டாவின் ஆலிஸ் கெளதம் புத்த நகர், புலந்த்ஷாஹர் மற்றும் டெல்லியில் உள்ள சுமார் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ரவி கானாவின் சொத்துக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள தனது காதலி பெயரில் வாங்கிய ரூ.80 கோடி பங்களாவும் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தாய்லாந்தில் காதலியுடன் பதுங்கியிருந்த ரவி கானாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.

The post லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது appeared first on Dinakaran.

Tags : Thailand ,NOIDA ,Dada Ravi Khana ,Kajal Jha ,Greater Noida, Uttar Pradesh ,Lookout ,Red ,Dada ,
× RELATED தாய்லாந்து வெளியுறவு துறை அமைச்சர் ராஜினாமா