தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மார்ச் 1ம்தேதி அன்று, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச் 1ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மார்ச் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஏற்பாட்டில், தங்க மோதிரங்கள், பழங்கள், உடைகள் ஆகியவற்றை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். அப்போது, மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் இ.எஸ்.பெர்னாட், ஏ.கே.கருணாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்கள், அங்கு வாக்குகள் சேகரிக்க சென்றபோது, பொதுமக்கள் அளித்த வரவேற்பை வைத்து, திமுக வெற்றிபெறுவது உறுதி என்று முன்னதாகவே எங்களுக்கு தெரியும். எனவே, ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றது நிர்ணயிக்கப்பட்ட வெற்றி. மக்களுக்கு எந்த சிக்கல்கள் இருந்தாலும், வனத்திற்கு கொண்டு வந்தால் தீர்த்து வைப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் 2 ஆண்டு காலங்களில் திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம்பெற, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் பொற்கால ஆட்சியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். கடந்த 2 ஆண்டு ஆட்சியில், முதல்வர் செய்த சாதனைகளுக்கு, அங்கீகாரம் தரக்கூடிய அளவிற்கு, இந்த ஈரோடு இடைத்தேர்தலில், ஈரோடு மக்கள் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.