×

தமிழ்நாடு, கேரளாவில் கைவரிசை: 2 மனைவிகளுடன் கணவன் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக பஸ்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள இடங்களை குறி வைத்து, செயின் பறிப்பு, செல்போன் திருட்டு ஆகிய சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர விசாரணையில் இந்த திருட்டில் 3 பெண்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன்பு பஸ்சில் வைத்து சுதா என்பவரின் செயினை 2 பெண்கள் நைசாக பறித்தனர். உடனே பஸ்சில் இருந்து 2 பேரும் நைசாக இறங்கினர். ஆனால் 2 பேரும் செயின் பறித்ததை சுதா தெரிந்து கொண்டார்.

உடனே அவரும் பஸ்சில் இருந்து இறங்கி 2 பேரையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார். அதைத் தொடர்ந்து 2 பேரையும் கோழிக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தேவி (38), சந்தியா (25) என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோழிக்கோடு மக்கரப்பரம்பு பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்ற விஜயகுமார் (44), அவரது மனைவி வசந்தா (45) ஆகியோரையும் கைது செய்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட தேவி, விஜயகுமாரின் 2வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்  விஜயகுமார், வசந்தாவின் மகள் சந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களில் துணி மற்றும் பாத்திரம் வியாபாரம் செய்வதாக கூறி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் ஷாப்பிங் மால்கள், பஸ்கள், சினிமா தியேட்டர்கள் உள்பட கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. தொடர் விசாரணைக்கு பிறகு போலீசார் 4 பேரையும் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : Tamil Nadu, Kerala , Raids in Tamil Nadu, Kerala: Husband arrested with 2 wives
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...