×

மின்வாரிய பெண் அதிகாரியை மிரட்டிய சென்னை போலி ஐஏஎஸ்; பரபரப்பு தகவல்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஈசான்ய லிங்கம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் யாத்ரி நிவாஸ் விடுதியில் கடந்த 27ம்தேதி இரவு ஐஏஎஸ் அதிகாரி என அடையாள அட்டையை காண்பித்து ஒருவர் தங்கினார். அவரை 4 வாலிபர்கள் அடுத்தடுத்து பலமுறை நேரில் வந்து சந்தித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வந்து அவரை சந்திக்கவில்லை. இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையை சேர்ந்த சுபாஷ்(29) என்பதும், ஐஏஎஸ் அதிகாரி, ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளராக பணியாற்றுவதாகவும் நாடகமாடி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், இதுதொடர்பான புகாரின்பேரில் சென்னை மதுரவாயல் போலீசாரால் கைதாகி சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சென்னையில் விஜிலென்ஸ் பெண் அதிகாரியை போனில் மிரட்டியதாக இவர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதும் போலீசாரால் தேடப்படுபவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ஐஏஎஸ் அதிகாரி, ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு போலி ஐடி கார்டுகள் சிக்கின. தொடர்ந்து சுபாஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகின. திருவண்ணாமலை வானவில் நகரை சேர்ந்தவர் சரிதா. இவர் போளூரில் மின்வாரிய உதவி பொறியாளராக உள்ளார். இவரிடம் நான்தான் உங்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கி தந்தேன் எனக்கூறி பணம் கேட்டு சுபாஷ் மிரட்டி உள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த மேலும் 2 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போளூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரியும் சரிதாவின் கணவர் சவுந்திரராஜன், திருவண்ணாமலை கிழக்கு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், ‘சென்னையில் உதவி பொறியாளராக வேலை செய்த எனது மனைவி சரிதா, போளூருக்கு டிரான்ஸ்பரில் வந்த விபரங்களை தெரிந்து கொண்டு, தனது முயற்சியால்தான் நடந்தது என சுபாஷ் போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி வருகிறார்’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷை நேற்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,IAS ,Board , Chennai Fake IAS Threatens Power Board Woman Officer; Exciting news
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை