மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட 10 மாடி கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கடையின் 9-வது தளத்தில் உள்ள உணவகத்தில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றிய நிலையில் உடனே கடையிலிருந்த மக்களும், ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மாட்டுத்தாவணி பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகளின் சுவாசத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.