×

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை... பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது, புல்வாமா மாவட்டம் அவந்திபுரா நகரில் பட்கம்புரா என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை. அவனிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Kashmir ,Pulwama district , Kashmir Pulwama, terrorist, shot dead
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!