திருவள்ளூர்: கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், தலைமை காவலர்கள் ராஜசேகர், அந்தோனி ஆகியோர் நேற்றுமுன்தினம் சிறுவானூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் வந்த 3 இளைஞர்கள் போலீசாரை கண்டதும், வண்டியை நிறுத்தி விட்டு அருகிலுள்ள பம்பு செட்டுக்குள் சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையில் ல், 280 கிராம் கஞ்சா மற்றும் 30 சென்டி மீட்டர் நீளமுடைய புகைப்பிடிக்கும் கருவி, கஞ்சா புகைக்க உபயோகப்படுத்தும் பாட்டில் ஆகியவை இருந்தது. அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில், திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், திருப்பாச்சூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் நவீன்குமார் (24). அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் ஜோசப் (19). ஆகிய 3 பேரும் சேர்ந்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. மேலும், 280 கிராம் கஞ்சா, புகைப்பிடிக்கும் கருவி, கஞ்சா புகைக்க பயன்படும் பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், நவீன்குமார், ஜோசப் ஆகிய 2 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையிலும் அடைத்தனர்.