×

ஆந்திர மாநிலம் நெல்லூர் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம், தோடேரு பகுதியை சேர்ந்தவர்கள் விஷ்ணு, கிரண், மகேந்திரா, மகேஷ், பாலாஜி, கல்யாண், ரகு பிரசாந்த், ஸ்ரீகாந்த், சுரேந்திரா ஆகிய 10 வாலிபர்கள் நேற்று மாலை கடடேம் அருகே உள்ள ரத்தனகிரி ஏரிக்கு சென்றனர். ஏரியில் படகு திடீரென கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில் 4 இளைஞர்கள் மட்டும் நீந்தி கரை சேர்ந்தனர். இந்நிலையில், 6 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட கரையில் இருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வாலிபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இரவு முழுவதும் தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி நடந்தும் அவர்கள் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆந்திர மாநிலம் வேளாண்துறை அமைச்சர் கக்கனி கோவதனின் சொந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதால் தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து கிருஷ்ணபட்டினம் துறைமுகத்திலிருந்து படகு கொண்டு வரப்பட்டு 8 நீச்சல் வீரர்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது. கல்யாண், ஸ்ரீகாந்த் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பாலாஜி, சுரேந்தரா, ரகு, பிரசாந்த் ஆகியோர் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : AP ,Nellore Lake Falls ,Lake Nellore , Andhra, Nellore, Lake, Boat, Accident, Casualty
× RELATED ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண்...