×

அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆன்லைனில் சாட்சி விசாரணை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி  வந்தது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019ல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐக்கு  மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு(25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34), அருண்குமார் (30) ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின், 2021 நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு  பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக  பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஒரு ஆண்டுக்கு  மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கோவை  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில்,  மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன்  வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின் போது  குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள்  சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.  அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில்  இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.

Tags : Pollachi ,AIADMK , Pollachi sex case during AIADMK rule witness examination online
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!