ஜகார்த்தா : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்மடைந்தனர். சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 47,000 பேர் உயிரிழந்தனர்.பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். துருக்கியைத் தொடர்ந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்தியாவிலும் சிக்கிம், அசாம்,உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனிடையே ஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் எனும் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்திலும் நேற்று 8 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள், வீடுகளை விட்டு அலறியடித்து கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். பெரிய கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளானார்கள். இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள், பலிகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
