திருச்சி: ‘உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றி தான்’ என டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: உச்சநீதிமன்ற தீர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இந்த தீர்ப்பு, ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும். எடப்பாடி பழனிச்சாமி வசம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும்.
பொதுக்குழு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தர்மயுத்தம் 1ல் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்மயுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பாஜக தான் அதிமுகவை இயக்குகிறது. நீதிமன்றங்களையும் பாஜக தான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் அணியில் அமமுக அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால் ஓபிஎஸ்சை அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன்.
அது மனித தன்மையும் அல்ல. கமல்ஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார். தேர்தலில் பரப்பரை மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாக்கிரதையாக பேச வேண்டும். ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். அவர் பேசும் பேச்சு ஆளுநர் பதவிக்கும் அழகல்ல, ஆர்.என்.ரவிக்கும் அழகல்ல. அவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி. அதனால் அப்படி பேசுகிறார். ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பது தான் எல்லோருடைய நிலைப்பாடு். இவ்வாறு அவர் கூறினார்.