சென்னை: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கட்டணமில்லா தொலைபேசி சேவையை அறிவித்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் டிஜிபி அருண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை கட்டுப்படுத்தவும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் அரிசியை பெற்று பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 5995950 வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி எண் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையில், திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சார்பில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், பஸ் நிலையம், திருவள்ளூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் மற்றும் பொது இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவிட வேண்டும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.