டெல்லி: எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக, டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி துணை முதல்வரான மணிஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ந் தேதி மணிஷ் சிசோடியா சி.பி.ஐ. முன்பு ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால், வருகிற 26-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை உளவு பார்த்ததாக மணிஷ் சிசோடியா மீது புதிய வழக்கு பதிவு செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மணிஷ் சிசோடியா ஏற்பாட்டில், ஃபீட்பேக் யூனிட் (Feedback Unit) என்ற அமைப்பை டெல்லி அரசு அமைத்தது. டெல்லி அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணித்து, ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதே இந்த அமைப்பின் நோக்கம். ஆனால், அந்த அமைப்பின் அதிகாரிகள் நியமனத்துக்கு கவர்னர் ஒப்புதல் பெறப்படவில்லை. துறைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு பதிலாக, ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் நலன்களுக்காக அந்த அமைப்பு செயல்பட்டுள்ளது.
இந்த அமைப்பு எதிர்க்கட்சிகள் தொடர்பான அரசியல் உளவு தகவல்களை சேகரித்தது. அதே சமயத்தில், அரசுத்துறைகளின் ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழுமையான விதிமீறல்கள் நடந்தது சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. சமர்ப்பித்தது. அதனை பரிசீலித்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்துள்ளது.

