வேலூர் : காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 செயற்கை கோள் தயாரித்த 71 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஏபிஜே அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் இருவரும் இணைந்து செயற்கைக்கோள் தயாரிப்பது சார்பான வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தி மாணவர்களை தேர்வு செய்தனர். 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 6,000 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதில் ஆன்லைன் மூலம் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 10ம் வகுப்பு வரை சேர்த்து மொத்தம் 71 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 71 மாணவர்களுக்கு முதல் கட்டமாக ஆன்லைனில் செயற்கைக்கோள் தயாரிப்பது பற்றியும், 2ம் கட்டமாக காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேரடியாக செய்முறைப் பயிற்சியும் நடந்தது.
71 பள்ளி மாணவர்கள் கடினமான உழைப்பின் காரணமாக 3 செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 3 செயற்கைக் கோள் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, செயற்கைக்கோள் தயாரித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜோதீஸ்வரன் தலைமை தாங்கி, பேசுகையில், ‘இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியானது மாணவர்களது கையில் உள்ளது என்பதை நிலை நாட்டும் வகையில் நமது பள்ளியைச் சேர்ந்த 71 மாணவர்கள் அதை நிரூபித்து உள்ளார்கள்.
அதே போன்று இன்னும் நிறைய அறிவியல் சார்பான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து பள்ளிக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் உங்களது இந்த அறிவியல் சாதனையால் நமது பள்ளி பெருமை அடைகிறது’ என்றார். விழாவில், இடைநிலை உதவி தலைமை ஆசிரியை கவிதா, ஆசிரியர்கள் பாபு, என்சிசி முதன்மை அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாமல்லபுரத்திற்கு சென்ற 71 பள்ளி மாணவர்கள் கொண்ட குழுவை பள்ளி ஆசிரியர் பாபு தலைமையில், பட்டதாரி ஆசிரியர்கள் கனிமொழி, சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் அழைத்து சென்றனர்.