நாமக்கல்: அரசியலில் கொடுக்கல், வாங்கல் சகஜம் என நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, எம்எல்ஏ சீட் தருவதற்கு ரூ.1 கோடி கேட்டு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், இது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு ராஜேந்திரபாலாஜி கூறுகையில், ‘அரசியலில் கொடுக்கல், வாங்கல் எல்லாம் சகஜம். இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது, அரசியல் நாகரிகம் கிடையாது. ஆடியோ வெளியிட்ட கிருஷ்ணமூர்த்தி, அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டார். அந்த ஆடியோவில், மாவட்ட செயலாளர் சீட்டு வாங்கி தருவதாக, ஒரு இடத்தில் கூட கே.பி.முனுசாமி சொல்லவில்லை. கே.பி.முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிய ஆடியோ உண்மையாக இருக்கலாம். ஆனால், அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை,’ என்றார்.