புதுடெல்லி: ராஜஸ்தானில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான 7 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு கடந்த செப்டம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு ராஜஸ்தானில் சில இடங்களில் இயங்கி வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, ராஜஸ்தானின் கோட்டாவில் மூன்று இடங்களிலும், மதோபூர், பில்வாரா, பண்டி, ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.