திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியர் உள்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விசாரணையை கடந்த ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் தொடர் விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதால் விசாரணையை முடிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர் உள்பட சில சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறி நடிகர் திலீப் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளதால் அது தொடர்பாக நடிகை மஞ்சு வாரியர் உள்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. போலீஸ் தாக்கல் செய்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், நடிகை மஞ்சுவாரியர் உட்பட 4 சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.