×

விழுப்புரம் அருகே தொடரும் மர்மம் ஆசிரமத்தில் எரிக்கப்பட்ட 300 பிணங்கள்: மாயமானவர்களா? திடுக்கிடும் தகவல்கள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆசிரமத்தில் அனாதை பிணங்கள் என்ற பெயரில் 300 பிணங்களை உரிமையாளர் எரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அனுமதியின்றி அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நடந்ததாக புகாரின்படி சீல் வைக்கப்பட்டது. ஆசிரமத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த விஜி மோகன்(46), பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, டிஎஸ்பி பிரியதர்ஷனி தலைமையிலான போலீசார் பெங்களூருவில், அம்மாநில காவல்துறையுடன் இணைந்து அங்குள்ள ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில், பெங்களூருவில் ஆட்டோ ராஜா என்பவர் மிகப்பெரிய அளவில் ஆசிரமம் மற்றும் மருத்துவமனை நடத்துவதும், அங்கு அன்புஜோதி ஆசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்ளிட்ட 53 பேரை, கடந்த 2021ல் ஒப்படைத்து அதற்கான ரசீதை ஜூபின்பேபி பெற்றுள்ளார். கடந்த 2022 மார்ச் 4ம் தேதி ஜபருல்லா உள்ளிட்ட 13 பேர் குளியலறை ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. 53 பேரில் 20 பேர் மட்டும் ஆசிரமத்தில் உள்ளனர். 20 பேர் உடல்நலம் சரியாகி விட்டதால் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மாயமான 13 பேரில் 2 பேர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 11 பேர் காணாமல் போய் ஓராண்டு ஆகிவிட்டது என்பதால் அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. ஆட்டோ ராஜாவை கைது செய்து விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இதேபோல், குண்டலப்புலியூர் ஆசிரமத்திலிருந்து ஜூபின்பேபி ராஜஸ்தான் மாநிலத்திற்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்திருக்கிறார். கர்நாடகா, ராஜஸ்தான் இப்படி பல்வேறு மாநிலங்களில் நடத்தும் காப்பக உரிமையாளர்கள் இணைந்து மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருப்பது தனிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரமத்தில் இருந்து ஆண்டுக்கு 30 முதல் 50 பேரை கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற  வெளிமாநிலங்களின் காப்பகத்திற்கு அனுப்பி உடல் உறுப்புகள்  எடுக்கப்பட்டதா? என மாயமானவர்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரஉள்ளதால் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷனி கூறுகையில், பலர் காணாமல் போனதால் ஆசிரமத்தின்  உரிமையாளர் ஜூபின்பேபியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை  நடத்தினோம்.

ஆனால் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கில் புலன் விசாரணைக்கு 4 தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்  இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கொரோனா காலத்திலும் அதற்கு முன்பும்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த  அனாதை பிணங்களை ஜூபின்பேபி எடுத்து வந்து அடக்கம் செய்துள்ளார். சிலரின் பிணங்களை போலீசார் முன்னிலையில் புதைத்துவிட்டு  சுமார் 300 பிணங்களை இதுவரை எரித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி எரிக்கப்பட்டவை அனைத்தும் அனாதை பிணங்களா, ஆசிரமத்தில் இருந்து மாயமானவர்களையும் இதே பட்டியலில் சேர்த்து அவர் எரித்திருக்கலாமா  என அஞ்சப்படுகிறது.

* ஜூபின்பேபி வாங்கி குவித்த பல கோடி சொத்துகள்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் மரியாஜூபின் (45). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர், மகள்களை பிரிந்த மரியாவுக்கும், எர்ணாகுளத்தை சேர்ந்த ஜூபின்பேபிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவில் இருந்து கடந்த 2003ல் விழுப்புரம் வந்த அவர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது ஜூபின்பேபியின் கேரள நண்பர் கோயம்புத்தூரில் ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்று நடத்தி வருவதை கண்ட அவர், தானும் அதேபோல் ஆசிரம் அமைக்க முற்பட்டு, நண்பரின் ஆலோசனையுடன் குண்டலபுலியூரில் சிறிய அளவில் கட்டிடம் கட்டி அதில் 5 முதல் 10 நபர்கள் வரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து அன்புஜோதி ஆசிரமம் தொடங்கி உள்ளார். ஆதரவற்றோரை காண்பித்து பல நன் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் பெற்று கேரள மாநிலத்தில் பலகோடி மதிப்புள்ள பல்வேறு அசையா சொத்துக்களை மனைவி மற்றும் உறவினர்கள் பேரில் வாங்கி குவித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

* டிரைவர் மாயம்
பண்ருட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த டிரைவரை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. போலீசார் அந்த டிரைவரை பிடித்தால் ஆசிரமம் குறித்த மேலும் பல மர்ம தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

*மேலும் 4 பேரை காணவில்லை: போலீசில் புகார்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பத்மா, புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்த  அண்ணன் தம்பிகளான கண்ணதாசன், நடராஜன் உட்பட 4 பேரும் மாயமானதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருந்து மருந்து வகைகள், முக்கிய ஆவணங்கள், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப் மற்றும் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஆகியோரின் பாஸ்போர்ட்களை வருவாய்த்துறை மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

* நீதிபதியிடம் 2 பெண்கள் வாக்குமூலம்
ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 2 பெண்கள் தனித்தனியாக புகார்கள் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு நேற்று விழுப்புரம் நீதிபதி அகிலாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். ஆசிரமத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 2 பெண்களும் தனித்தனியாக வாக்குமூலம் அளித்ததை நீதிபதி பதிவு செய்துள்ளார்.

*மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கல்
ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. ரேஷன் அரிசியை கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக வாங்கி அவற்றை சமைத்து வழங்கி உள்ளனர். ஆசிரமத்தில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு எப்போதாவதுதான் குழம்பு போன்றவை வழங்கப்படுமாம். மற்ற நாட்களில் கஞ்சி மட்டுமே காய்ச்சி கொடுத்துள்ளனர்.


Tags : Vilappuram , Villupuram, continuing mystery, ashram, 300 cremated bodies
× RELATED கிளியனூரில் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் கைது