×

சிவம் என்பது வடிவமோ, பெயரோ, அடையாளமோ இல்லாத நிலையில் இருக்கும் பரம்பொருளின் சிறப்பு நிலையைக் குறிப்பது: சத்குரு

சிவன், சைவ சித்தாந்தத்தின் முழுமுதற்கடவுள். சிவனின் பல்வேறு பெயர்கள் அவருடைய பல பரிமாணங்களின் குறியீடாக இருக்கிறது. நம் பாரத கலாச்சாரத்தில், சிவனுக்கு 1008 பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் அவரின் இயல்பைக் குறிக்கும் விதமாக அழைக்கப்படுகிறது.

இந்த கலாச்சாரத்தில், குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் கூட தங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை வைப்பார்கள். அதனால் அப்பெயரை தினமும் அடிக்கடி உச்சரித்துக்கொண்டே இருக்க வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணும் அளவிற்கு பக்தி சார்ந்த வாழ்க்கை வாழ்கிறது இப்புண்ணிய பூமி. இயற்கையும் இயக்கக்கூடிய பேரறிவாய் விளங்குகின்ற ஒரு பொருளை நம் முன்னோர் இயவுள் என்றார்கள். இதனையே வள்ளுவர் வாலறிவு என்றார். அப்பொருள் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுள்ளும் நின்றும் இயங்குவதால் அதைக் கடவுள் என்றார்கள்.

உண்மை, அறிவு, இன்பமாய்  விளங்கும் அப்பொருள் சிறப்பும் வனப்பும் மிக்கதாய் இருப்பதனால் சிவம் என்றார்கள். சிறப்பு என்ற சொல்லின் ‘சி’ கரமும் வனப்பு என்ற சொல்லின் ‘வ’ கரமும் இணைந்து சிவம் என்று ஆகியது. சிவம் என்பது வடிவமோ, பெயரோ, அடையாளமோ இல்லாத நிலையில் இருக்கும் பரம்பொருளின் சிறப்பு நிலையைக் குறிப்பது.

சிவனின் 108 பெயர்களும், ஏன் அவருக்கு இவ்வளவு பெயர்கள் என்பது பற்றிய சத்குருவின் விளக்கமும் இடம் பெறுகிறது “யோகக் கலாச்சாரத்தில், சிவன் கடவுளாக பார்க்கப்படுவது இல்லை. ஒரு குருவாக வணங்கப்படுகிறார். நாம் சிவா என்று குறிப்பிடும் ஒன்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. நீங்கள் எவர் ஒருவருக்கும் குறிப்பிடுகிற குணங்கள் எல்லாமே சிவனுக்கும் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவா என்று நாம் சொல்லும்போது, அவர் இது போன்றவர், அது போன்றவர் என்றெல்லாம் சொல்வதில்லை” என்கிறார் சத்குரு.

பொதுவாக, அறநெறி சார்ந்த கலாச்சாரத்தில், தெய்வீகத்தன்மை என்பது எப்போதும் நல்லதாகவே உணரப்படும். ஆனால் சிவனை நீங்கள் பார்த்தால் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அவரிடம் ஒரு அங்கமாக இருக்கும். அவர் அப்படித்தான் இந்தக் கலாச்சாரத்தில் விவரிக்கப்பட்டு இருக்கிறார்.

சத்குரு மேலும் சொல்கிறார், “அவருக்கு எண்ணிலடங்கா வடிவங்களும், வெளிப்பாடுகளும் இருந்தாலும், அடிப்படையில் ஏழு பிரிவுகளில் அவரை வகைப்படுத்தலாம். தொலைதூரத்தில் இருக்கும் கடவுள் தன்மையாக இருப்பதை நாம் ஈஸ்வரா என்கிறோம். கருணை மிகுந்த கடவுளாக இருப்பதை ஷம்போ என்கிறோம். எந்தச் சிக்கலும் இல்லாத துறவியாகவோ, எளிமையான அன்பு நிறைந்த சம்பலேஸ்வரா அல்லது போலா என்கிறோம். வேதங்களின் நல்ல ஆசிரியராக இருக்கும்போது தக்ஷிணாமூர்த்தி என்கிறோம்.

அனைத்து கலைகளின் ஊற்றாக இருக்கும் போது நடேசன் என்கிறோம், பொல்லாதவர்களை கடுமையாக அழிக்கும்போது, காலபைரவர் அல்லது மஹாகாலா என்கிறோம். காதலோடு மயக்கும்போது, நிலவை விட அழகானவர் என்னும் பொருளில் சோமசுந்தரர் என்று நாம் அழைக்கிறோம். அடிப்படையான இந்த ஏழு வடிவங்களை வைத்து பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடுகளை நாம் வகைப்படுத்த முடியும்.

யோகக் கலாச்சாரத்தில், அகண்ட இந்த ஏழு பிரிவுகளின் கீழ் 1008 பெயர்கள் சிவனுக்கு உள்ளது. இந்த 1008 பெயர்களில், 108 பெயர்கள் அதிகமாக அறியப்பட்டு உள்ளது. உதாரணத்திற்கு, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ஒரு சில பெயர்களை அதன் அர்த்தத்துடன் இங்கு காண்போம்.

ஆஷுதோஷ்    - அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்.
ஆதிநாத்    - முதல் கடவுள்.
ஆதியோகி    - முதல் யோகி.
பைரவ்     - பயத்தை அழிப்பவன்.
பலநேத்ரா    - நெற்றிக்கண் உடையவன்.
போலேநாத் -     எளிமையானவன்.
திகம்பரா - வானத்தையே தனது ஆடையாக அணிந்தவன்.
கங்காதரா -     கங்கை ஆற்றின் கடவுள்.
ஜகதீஷா    - பிரபஞ்சத்தின் தலைவன்.
கைலாஷ்நாத் -     கைலாயத்தின் நாதன்.
மஹாதேவா     - மஹா கடவுள்.
மஹாகாலா -     காலங்களின் கடவுள்.
மஹேஷ்வரா -     கடவுள்களின் கடவுள்.
நடராஜா -     நடனக்கலையின் அரசன்.
நீலகண்டா    - நீல நிற கழுத்தை உடையவன்.
ஓம்காரா    - ஓம்-ஐ படைத்தவன்.
பஞ்சாட்சரன் -     வீரியமுடையவன்./ஐந்தெழுத்தைக் கொண்டோன்.
பரமேஸ்வரன் -     கடவுள்களிலெல்லாம் முதலானவன்.
பசுபதி    - வாழும் உயிர்க்கெல்லாம் அரசன்.
ருத்ரா     - கர்ஜிப்பவர்.
சதாசிவா -     எல்லைகளைத் தாண்டியவர்.
சர்வேஷ்வரா -     அனைவரின் கடவுள்.
ஷம்போ -     மங்களகரமானவர்.
ஷங்கரா    - எல்லா கடவுளர்க்கும் கடவுள்.
சோமேஸ்வரா -     தூய்மையான உடலைக் கொண்டிருப்பவர்.
விஸ்வேஷ்வரா -     பிரபஞ்சத்தின் கடவுள்.

அனைத்திற்கும் அடிப்படையானதும், ஆதியானதுமான பெயர் ஆதியோகி. யோக அறிவியலின் சாரமான 112 வழிமுறைகளை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட 112 அடியிலான ஆதியோகி திருவுருவம், கோவை ஈஷா யோக மையத்தில் உள்ளது.

தற்போது உலகின் கவனத்தையே ஈர்த்து நிற்கும் ஆதியோகி இந்தியாவின் சிறந்த ஆன்மீக தலமாக உருவெடுத்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தாலும், வரமுடியாத மக்களுக்காக அவர்களின் இடத்திற்கே ஆதியோகியை அழைத்துப்போய் தரிசனம் தருவதே ஆதியோகி ரதங்களின் நோக்கமாகும்.

தென் கைலாய பக்தி பேரவை சார்பில் பக்தர்கள் மாலையணிந்து சிவாங்கா விரதமிருந்து மலையேறி சிவனை தரிசிக்கின்றனர். மேலும் அவர்கள் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரதமானது தமிழகமெங்கும் உள்ள பக்தர்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. கடந்த மாதம் டிசம்பர் 17 அன்று கோவையில் இருந்து புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள் பல்லாயிரக்கணக்கான கி.மீ தூரத்தை கடந்து வரும் பிப்ரவரி 17 அன்று ஈஷா யோக மையத்தை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Shiva ,Satguru , Shiva, the state without form, name, or identity, the special state of the Supreme Being, Satguru
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு