சென்னை: வேலை தேடி தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறும் கொள்ளை சம்பவங்களில் வட மாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களை தமிழக அரசும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி வாழவும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.