லக்னோ: சமுதாயத்தில் எந்த ஒரு பிரிவினரும் வளர்ச்சியில் பின்தங்கி விடாமல் அனைத்து தரப்பினரும் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.பக்சா என்ற பழங்குடியின மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,‘‘உபி மக்கள் தொகை 25 கோடி. இந்நிகழ்ச்சியில் பக்சா பழங்குடியின மக்கள் மட்டும் அழைக்கப்படுவதற்கான காரணம், சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரும் வளர்ச்சியில் பின்தங்கி விடக்கூடாது என அரசு கருதுகிறது.
அனைவரும் முன்னோக்கி நகர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிப்பதற்கான வசதிகள் பெற்று பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வி,பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பக்சா சமூகம் பின்தங்கி உள்ளது. அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. நான் ஆளுனராக இருந்த போது, பழங்குடி இன மக்களை மேம்படுத்த திட்டங்கள் வகுக்க அரசுக்கு யோசனை தெரிவித்தேன். பழங்குடியினருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நல்ல தொடக்கம் அமைந்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பெண்கள், ஆண்கள் இருவருக்கும் கல்வி மிகவும் அவசியம். பழங்குடியினர் பலர் பஞ்சாயத்து தலைவர்கள், குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும்’’ என்றார்.