தென்காசி: மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய தமிழ் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழாபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48). இவர் தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன், ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைகேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலின் பேரில் புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைதொடர்ந்து, ஆசிரியர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.