கோவை: கோவையில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் சேரன் டவர்ஸ் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமானது. இதில் காபி ஷாப், ஓட்டல் உள்பட 20க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இந்த வணிக வளாகத்திற்கு மண்டல உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வந்தனர். அங்கு செயல்பட்டு வரும் 5 கடைகள் இதுவரை சொத்து வரி கட்டாமல் இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் ரூ.1 கோடியே 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது. வரி நிலுவை தொகை செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வணிக வளாகத்தில் உள்ள 5 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
* போலீசுடன் வாக்குவாதம்
கோவை சேரன் டவரில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தது மற்றும் நோட்டீஸ் ஒட்டியுள்ள தகவலறிந்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமிக்கு அங்கு வந்தார். அவர் மாநகராட்சி அதிகாரியிடம் சீல் வைத்தது தொடர்பாக கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.