கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவின் ஹரிதேவ்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் மர்மமான முறையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் சடலங்களை மீட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின. இதுகுறித்து ஹரிதேவ்பூர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தூக்கில் தொங்கிய நிலையில் ரவீந்திர சவுராசியாவின் சடலமும், ஷாகுப்தா பர்வீனின் உடல் தரையிலும் கிடந்தது.
சம்பவ நாளில் வெளியூர் சென்றிருந்த ரவீந்திர சவுராசியாவின் மனைவி தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் இருவரும் இறந்து நிலையில் இடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு கடிதம் கைப்பற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ரவீந்திர சவுராசியாவுக்கும், ஷகுப்தா பர்வீனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. தற்கொலை குறிப்பு கடிதத்தில், ‘என் சாவுக்குக் காரணம் இந்தப் பெண்தான். இவரால் என்னுடைய வாழ்க்கையே பாழாகிவிட்டது’ என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதம் ரவீந்திர சவுராசியாவால் எழுதப்பட்டதா அல்லது வேறு யாராலும் எழுதப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ஷாகுப்தா பர்வீனை கொலை செய்துவிட்டு, ரவீந்திர சவுராசியா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே கள்ளக்காதல் ஜோடிகளின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்’ என்றனர்.