சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோயிலில் இன்று ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தினார். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (வியாழன்) காலை சுவாமி தரிசனம் செய்து தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கரன்கோவில் கோயில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடை பொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் தங்க தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மேலும் நாளை நடைபெற உள்ள தெப்ப திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.