சென்னை: சென்னை மெரினா கடற்கரைகளில் கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கியவரை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் பிப்ரவரி 1ம் தேதி இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் முன்னிலையில் கடலில் மூழ்கியவரை மீட்பதை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அலைகளால் இழுத்து செல்லப்பட்டவர்களை மீட்பது, ரோந்து பணியின் போது குற்றச் சம்பவங்களை தடுப்பது போன்றவைகளை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அப்போது இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்து கடற்படை வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர். கடலில் தத்தளிப்போரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது குறித்து செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் கடலோர காவல்படையில் உள்ள சுஜய், சகர், அன்னிபெசன்ட் மற்றும் சி-30 ஆகிய கப்பல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எழுச்சி தினத்தை முன்னிட்டு சென்னை, மும்பை, கொல்கத்தா,போர்ட் பிளேர், காந்திநகர் ஆகிய கடலோர காவல் படையின் 5 மண்டலங்களிலும் இந்த சாகசம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது.