×

அண்ணாமலை பேனர் கிழிப்பு பாஜ நிர்வாகிகள் மீது போலீசில் புகார்

திருவொற்றியூர்: மணலியில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர்  அண்ணாமலை ஆகியோருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை கிழித்த, பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜ பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துகணேஷ் (45), மளிகை கடைக்காரர். பாஜ வடசென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவராகவும் உள்ளார். கடந்த 28ம்தேதி மணலியில் பாஜ நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது.

இதற்காக, முத்துகணேஷ் வரவேற்பு பேனர் ஒன்றை திருவள்ளுவர் தெருவில் வைத்து இருந்தார். இந்நிலையில், பாஜ மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்ததன் காரணமாக, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 28ம்தேதி இரவு முத்துகணேஷ் வைத்த வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டு சேதமடைந்து கிடந்தது.

இதை பார்த்த அவர் அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது, அதில், 2 பாஜ நிர்வாகிகள், நள்ளிரவில் வரவேற்பு பேனரை கிழிப்பது பதிவாகி இருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பாஜ நிர்வாகிகள் மீது, மணலி காவல் நிலையத்தில் முத்துகணேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ நிர்வாகி வைத்த பேனரை, அவரது கட்சி நிர்வாகியே கிழித்தது மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,Annamalai , Police complaint against BJP officials for tearing down Annamalai banner
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...