சென்னை: மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 என 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 என 1,200 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 1வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.