துபாய்: ஈரான் நாட்டில் உள்ள ராணுவ தொழிற்சாலை மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் மத்திய நகரமான இஸ்பகானில் ஈரான் நாட்டின் ராணுவ பாதுகாப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன்மீது நேற்று முன்தினம் இரவு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் தப்ரிஸ், தெஹ்ரான், கராஜ் உள்ளிட்ட இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்ற விவரம் வௌியிடப்படவில்லை. அணுஆயுத விவகாரத்தில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.