ஆனைமலை : ஆனைமலை பகுதி நெல் வயல்களில் இலவசமாக டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளிப்பு பணிகளை வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்டு அசத்தி வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளான, ஆனைமலை மற்றும் கோட்டூர், ரமணமுதலிபுதூர், மயிலாடுதுறை, காளியாபுரம், ஒடையகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக, சுமார் 6,500 ஏக்கர் விவசாய நிலங்களில் இரண்டுபோக நெல் சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் ஆழியாரிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால், கடந்த ஜூன் மாதம் இறுதியிலிருந்து முதல்போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அவை நல்ல விளைச்சல் அடைந்ததுடன், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் அறுவடை பணி துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை பணி நடந்துள்ளது. இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அவ்வப்போது தொடர்கிறது.
இதனால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக, கடந்த டிசம்பர் மாதம் துவக்கத்தில் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் நாற்றங்கால் ஏற்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த மாதம் துவக்கத்திலிருந்து, நாற்றாங்காலை எடுத்து, வயல்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நாற்று நடவு பணியில் விவசாயிகள் இறங்கினர்.
ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றானது, காரப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், நெல் நல்ல விளைச்சலடையவும், பூச்சி தாக்குதல் இருந்து விடுபடவும் விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் மற்றும் மேல்நுட்ப மையம் சார்பில், பாசன வேளாண்மையை நவீனபடுத்துதல் திட்டத்தின் கீழ் ஆனைமலை பகுதியில், உள்ள நெல் வயல்களில் டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது.
இதனை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மேல்நுட்ப மைய பேராசிரியர் செல்வகுமார் துவக்கி வைத்ததுடன், அதன் தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘‘ஆனைமலை சுற்றுவட்டாரத்தில், நெல் வயல்களுக்கு டிரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இப்பணி சுமார் 500 ஏக்கரில் நடைபெறும்.
கை ஸ்பிரே மூலம் களைகொல்லி தெளிப்பதால், தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்குவதுடன், நேரம் விரயமாவது தவிர்க்கப்படும். 6 நிமிடத்தில் ஒரு ஏக்கரில் களைக்கொல்லி மருந்து தெளித்துவிடலாம். டிரோன் மூலம் களைகொல்லி தெளிக்கும் பணி இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனை, விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தனர்.