×

மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை

வருசநாடு : மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஒன்றியம் தாழையூத்து கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லப்புரம் கிராமத்தை இணைக்கும் வகையில் மலைச்சாலை அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து - மல்லப்புரம் இடையே புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடமலை - மயிலை ஒன்றியத்தில் இருந்து விருதுநகர், பேரையூர், ஏழுமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை வழியாக செல்வதை விட மலைச்சாலையை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் மலைச்சாலையை பயன்படுத்த தொடங்கினர்.

மேலும் காலை, மாலை நேரங்களில் மலைச்சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் மலைச்சாலை வழியாக போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி 15 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்து - மல்லப்புரம் இடையே அரசு மினி பஸ் சேவையும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மலைச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக செடிகள் ஆக்கிரமிப்பு மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு சாலையின் அளவு குறுகத்தொடங்கியது. மேலும் மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது.

இதனால் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறியது.மேலும் சாலை குறுகியதால் ஒரே நேரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் கூட விலகிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த மலைச்சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் லாரி, வேன் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகி செல்லும் போது சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே விபத்து அச்சத்தால் பெரும்பாலன வாகன ஓட்டிகள் மலைச்சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது மலைச்சாலை வழியாக டூவீலர்கள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி 8 கி.மீ தொலைவுடைய மலைச்சாலையில் தேனி மாவட்ட எல்லை வரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. மதுரை மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள மீதமுள்ள 7 கி.மீ தொலைவு சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து முறுக்கோடையை சேர்ந்த டிரைவர் ரவி கூறும்போது, மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடமலை - மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான சாலை வழியாக சென்றால் 70 கி.மீ தொலைவு செல்ல வேண்டும்.ஆனால் மல்லப்புரம் மலைச்சாலையை பயன்படுத்தினால் 20 கி.மீ தொலைவில் கிராமங்களுக்கு சென்று விடலாம். தற்போது சாலை அதிக சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்பட்டாலும் பயண நேரம்
மற்றும் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு பெரும்பாலும் மலைச்சாலையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இரண்டு மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து மல்லப்புரம் மலைச்சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

இப்பிரச்னை குறித்து முத்தாலம்பாறையை சேர்ந்த முருகன் கூறும்போது, மல்லப்புரம் மலைச்சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு அதில் பஸ் வசதி ஏற்படுத்திய பின்பு முத்தாலம்பாறை, தாழையூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்டம் மல்லப்புரம் பகுதியில் நிலங்களை வாங்கி விவசாயத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதேபோல மல்லப்புரம் பகுதி பொதுமக்கள் தாழையூத்து பகுதியில் விவசாய நிலங்கள் வாங்கினர்.

சாலை நல்ல நிலையில் இருந்து அதில் அதிக போக்குவரத்து நடைபெற்று வந்த சமயம் விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வரவும், விளை பொருட்களை ஏற்றி வரவும் எளிதாக இருந்தது. ஆனால் தற்போது சாலை சேதமடைந்து போக்குவரத்து குறைந்த பின்பு தோட்டங்களுக்கு செல்ல ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்காக அவர்கள் அனைவரும் நீண்ட நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்து விளை பொருட்களை ஏற்றிக்கொண்டுவர வேண்டியதாக உள்ளது.
எனவே இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு இச்சாலையை சீரமைப்பது மட்டுமே. எனவே அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Tags : Mallappuram ,Madurai ,Theni , Varusanadu: Motorists have demanded that the Mallapuram hill road connecting Madurai-Theni districts should be repaired.
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு