வேலூர்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வர உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும் முன்னேற்பாடுகள் குறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று டிஆர்ஓ ராமமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியன தொடர்பாகவும், அரசின் நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி முதல் வாரத்தில் வர உள்ளார். இதைதொடர்ந்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு, முதல்வர் பயன்படுத்தும் சாலையில் உள்ள வேகத்தடை அகற்றம், அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் நடத்த ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.